Skip to main content

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 4

 இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 4

அறிவின் மேல் மனம் படர்தல்

விஞ்ஞான லோகாயதவாதத்தில் மூளையின் செயல், சிந்தனை என்ற ஒன்றே உள்ளது. மனம், அறிவு என்று இரண்டில்லை. மனம் என்ற ஒன்று ஏன் இவ்வாராய்ச்சிக்கு எடுத்தோம் என்ற விளக்கம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது.புலன்களால் அறிந்து யதார்த்த சிந்தனையுடன் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் அறிவு என்றாலும் இங்கு இதை அனைவராலும் செய்ய முடியாமல் போகுமாதலால், ஆராய்ச்சியை தவிர்த்து புலன்களால் அறிந்து யதார்த்த சிந்தனை மற்றும் தெளிவு கொள்ளலை அறிவு என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது மனம் மற்றும் அறிவின் விளக்கம் கொடுத்தாகி விட்டது, பல நேரங்களில்  கருத்துமுதல்வாதத்தின் வெற்றியாக இந்த நிலை தோன்றுகிறது.மனதின் ஆதிக்கம் அறிவைத் தாண்டியும் அதிகமாக இருப்பதற்கு, தேவை என்ற ஒன்று மட்டும் தான் காரணம் என்று இல்லை, மனிதன் கொண்ட பயமும் ஒரு காரணமாக அமைகிறது. இந்த பயம் தேவையைத் தாண்டிய ஒன்றாக அமைகிறது (புத்தர் தன் உரைகளில் பயபைரவன் பற்றியும், அமாவாசை இரவை பற்றியும் கூறியுள்ளார்). நான் பயத்தை முதல் அங்கத்திலேயே ஒரு கூறாக சேர்க்காமல் போனதற்கு ஒரு காரணம் உள்ளது. ரமணரை தவிர பக்தி மற்றும் ஞானமார்க்கத்தில் வருவதற்கு மரண பயம் ஒரு காரணமாக யாருமே வெளிப்படையாக கூறிக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் ரமணர் ஓரளவேனும் உண்மையை கூறினார் என்பது ஆனந்தமே. பக்தபிரகலாதன், திருநாவுக்கரசர் ஆகியோர் நமனே அஞ்சோம் என்று கூறியதாலும் மரணபயம் என்பது இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுபட்டே உள்ளது. இவர்களின் மரணபயம் நீங்க காரணம் இவர்கள் அறிவின் பாதையில் இருந்து வெகுதூரம் விலகி மனதில் ஆதிக்கத்தினால் பக்தியில் ஈடுபட்டது. (பக்தி என்பது வரலாற்றில் எங்காவது சமுதாயத்தில் உள்ள நிறைகுறைகளை கண்கொண்டு கண்டுள்ளதா? என்பதை ஐயமே. அவை முழுவதுமாக புலன்களை விடுத்து தனக்கென ஒரு மாய உலகத்தை தோற்றுவிடத்து வாழ சொல்லிக்கொடுக்கிறது). ஆனால் இன்று பொருளாதார ரீதியாக மாபெரும் ஆதிக்கத்தை பக்தியே செலுத்துகிறது. அதன் ஆணி வேராக இருப்பது பயம் மற்றும் மரணபயம் என்பதே உண்மை. ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரங்களில் உங்களால் பல கோவில்களில் சத்ருசம்ஹார வழிபாடுகளில் மக்களை காண முடியும். இந்தக் கூட்டத்திற்கு பயம் மற்றும் சகமனிதர்களும் உள்ள வெறுப்பு என்ற ஒன்றை காரணமாக உள்ளது. போர்க்காலங்களிலும் கொள்ளை நோய்வரும் நேரங்களிலும் மரண பயம் அதிகமே. ஆனால் இவைகள் மனதில் கொடுக்கும் பிரதிபலிப்பு வேறாக உள்ளது. சிலருக்கு இந்த மரணபயம் கடவுள் தேவைக்கு வழி வகிக்கிறது. பலருக்கு அது கடவுளின் இருப்பையே கேள்வி கேட்க வைக்கிறது. இதை கண்கூடாக நாம் கொரோனா காலங்களில் கண்டதுதான். கண்ணுக்குத் தெரியக்கூடிய நிலையில், உடம்பில் மண்டையோட்டு மாலையுடன் தீ பொங்கும் நாவை கொண்டு பெரும்வாள் எடுத்து அந்தக் காளி வந்திருந்தால் கூட மக்களின் பயம் கொரோனா காலத்தில் இருந்ததை விட குறைவாகவே இருந்திருக்கும். எல்லா மதங்களிலும் மரணத்துக்கு பின் என்ன என்பது மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவை ஒரு ஒளி பொருந்திய விளக்கினை விட்டில் பூச்சிகள் அடைவதைப்போல மக்கள் தங்கள் மனதில் வசத்தால் அடைகின்றனர். இந்துதத்துவவியலில் மிக முக்கியமாக உபநிடதங்களில் உள்ள இம்மை-மறுமை, பிரம்மதத்துவம் ஆகியவை மற்றும் அதன் அரசியல் தேவைகள் பற்றி வால்கா முதல் கங்கை வரை நூலில் ராகுல்ஜி பிரவாஹன் என்ற கதையில் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். மொத்தத்தில் இம்மை மறுமை மறு பிறவி என்பது கிடையாது எல்லாம் ஒரு வசீகரிக்கும் யுக்திகளை ஆகும். அடுத்த காரணம் சமூகக்கட்டுப்பாடு, இவற்றில் விதிகளைப்பின்பற்றுதல், சடங்குகள், மூடப்பழக்கவழக்கங்கள், தீண்டாமை, சாதிப்பாகுபாடு இவை எல்லாம் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளது. இதை இன்னும் விரிவாக அடுத்து பார்க்கலாம்.

 

புதிய சிந்தனைக்கு பூட்டு

மனிதன் தன் அறிவினாலும் அறத்தைக்கொண்டு செய்யும் செயல்களினாலும் பல நேரங்களில் ஆஸ்திகர்களின் எதிர்ப்பைத் தேடிக்கொள்கிறான். கடவுள் நம்பிக்கை மற்றும் ஆஸ்திகர்களின் பின்னால் நிலப்பிரபுக்கள் அல்லது அதிகார வர்க்கங்களின் கை ஓங்கி உள்ளது. இது பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. சடங்குகள், மூடநம்பிக்கை, இம்மை-மறுமை, ஆன்மா, பிரம்மம் இவையெல்லாம் எவ்வாறு அதிகாரம் மற்றும் பணம் படைத்த பிரபக்களுக்கு தொடர்பு உள்ளது? வால்கா முதல் கங்கை வரை நூலில் ராகுல்ஜி பிரவாஹன் தான் இதற்கு பதில்.இக்கட்டுரையில் முதலில் தேன்துளியை சுவைத்தவனை ஆன்மீகம் எப்படி பார்த்ததோ, அதுபோலவே எபிகுரியர்களையும் கிரேக்கத்தில் பார்த்தனர். இந்த உலகம் இன்பமயமானது, அதை நன்றாக அனுபவிக்கலாம் என்று எபிகுரியர்கள் கூறினர். இந்தியாவின் சார்வாகர்களும் எபிகுரியர்களும் ஊதாரிகள், தர்மத்தை பின்பற்றாதவர்கள் மற்றும் சமுதாயத்தில் இவர்களுடன் பாதுகாப்பாக வாழ இயலாது, போன்ற தோற்றத்தை ஆன்மீகவாதிகள் ஏற்படுத்தினர். அதற்குத்தேவையும் இருந்தது. எபிகுரியர்களின் பரமாணு தத்துவம் டெமோகிரதுவினுடையது. இது அறிவியல் சார்ந்ததாகவும் கருத்துமுதல்வாத எண்ணத்தை எதிர்க்கும் படியாகவும் இருந்தது. மனச் சிந்தனையை மடைமாற்றம் செய்தவர்கள் புதிய சிந்தனைக்கு பூட்டிடாமல் போவார்களா? பகுத்தறிவுவாதிகள் நிந்திக்கப்பட்டனர். அவர்களின் கண்ணியம் என்றுமே உரைத்துப் பார்த்து சரியில்லை என்றே கூறப்பட்டது. இந்த யுக்தி இன்றளவும் பலராலும் உபயோகப்படுத்தப்படுகிறது. எங்கள் நகரில் "மெய்யுணர்வு மையம்" என்று ஐந்து நாள் பட்டறை வகுப்புகள் நடந்தன. மலேசியாவைச் சேர்ந்த ஒரு கார்ப்ரேட் குரு (அவர் நன்றாக அறிதுயில் நிலை அல்லது மனோவசியம் தெரிந்தவர்) எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் கையாண்டு வந்தார். சிலரைப் பார்த்து இதுதான் உன் கடைசி பிறவி என்று கூறுவார், சிலரை பற்றிய சில தகவல்களை கூறிக் கொண்டே வருவார். ஒருவர் தன்னைப் பற்றி ஏதாவது கூறினால் தான் நான் நம்புவேன் என்றார். குரு பலமுறை மறுத்த பின்னர் கடைசியாக அவரிடம் "திருமணத்துக்கு பின்பும் ஏன் இந்த வேண்டாத உறவு" என்று கூறினார். கேள்வி கேட்டவர் அமைதியானார். பின்னர் அவர் ஒன்றுமே பேசவில்லை. இந்த நிகழ்ச்சியை கண்ட அனைவரும் மந்திரிக்கப்பட்ட கோழியைப்போல் அந்த மனிதரை அருவருடன் கண்டனர். அவர் அப்படித்தான் செய்திருப்பார் என்று அனைவரும் நம்பினர். இதை கண்டுபிடித்த அந்த கார்ப்ரேட் குரு கலியுக கடவுளாகவே வணங்கப்பட்டார். "ஹூ ஹூ" என்ற தாரக மந்திரத்தை அனைவரும் கூவினர். தேவர்கள் வானில் இருந்து புஷ்பவர்ஷம் செய்தனர். இதை எந்த புராணத்தில் சேர்க்கலாம் என்று வியாசர் யோசித்துக் கொண்டிருந்தார்.கேள்வி கேட்டவரின் மௌனம் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை கவனித்தால் உங்களுக்கு எல்லாம் விளங்கும். ஒருவரைப் பற்றிய செய்தியை சொல்வதை விட அவரின் தன்மானத்தையும் தன்னம்பிக்கையையும் குலைப்பது, அமைதியாக அமர வைப்பது என்று தெரிந்தால் போதும். இந்தக் கார்ப்பரேட் குருவிடம் இன்றளவும் அவரிடம் தேவையில்லாமல் கேள்வி கேட்பவர்கள் வாயை மூட்ட பல தொழில் ரகசியங்களை வைத்திருக்கிறார். ஆம் அவர் ஒரு நவயுகரிஷிதான். பிரம்மவாதத்தின் போது கார்க்கிவாசக்னவி கேட்ட கேள்விக்கு யாக்யவால்கியர் கொடுத்த பதில் இது போலவே ஆகும். உன் உடம்பில் உன் தலை இருக்காது என்று கூறும் தைரியம்  யாக்யவால்கியரிடம் இருந்தது ஏனெனில் அவர் முன் மிதிலாதேசத்து அரசன் ஜெனகன் கைகட்டி நின்றான்.இன்று பல கார்ப்ரேட் குருக்கள் அப்படி நேரடியாக சொல்வதை தவிர்த்தாலும் அவர்கள் அப்படி செய்யக்கூடியவர்களே ஆகும். 

x

Comments

Popular posts from this blog

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2  மனித மனம் எப்படிப்பட்டது ?   இன்றைய நிலையில் மனிதமனம் தன்தேவைகளை குறித்து பெரும்பாலும் சிந்திக்கிறது . அது ஆசையாகவும் இருக்கலாம் தேவையாகவும் இருக்கலாம் சிக்கல் இங்கேயே ஆரம்பிக்கிறது. இந்துதத்துவவியல் மனம் ஆசையை வெல்லும் என்றும் புலனடக்கம் தேவை என்றும் பறைசாற்றும். எண்ணற்ற உதாரணங்களும் புராண நிகழ்வுகளும் இதற்கு சான்றாக கொடுக்கப்படுகிறது (ஆனால் புலனடக்கம் எல்லோருக்குமானதாக நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது) . இந்தத் தேவை அல்லது ஆசையால் தூண்டப்பட்ட மனம் அதை அடைய தவிக்கிறது. மனம் மென்மேலும் துன்பங்களை விரும்புவதில்லை, அது இன்பத்தையே நாடுகிறது. மனம் ஏதோ ஒரு லஹரியில் இருக்க விரும்புகிறது. மனம் பணம், துணை, அதிகாரம், செல்வாக்கு என்று ஏதாவது ஒன்றை தேடுகிறது. அதை அடைய ஆவலடைகிறது. மனம் போற்றுதலுக்குரிய சூழ்நிலையில் வாழ விரும்புகிறது. மனம் குறைந்த உழைப்பையும் அதிக பலனையும் விரும்புகிறது. இந்தத்தேவை, ஆசை, இன்பம், துன்பமின்மை, லஹரி, பணம், அதிகாரம், செல்வாக்கு, போற்றுதல், குறைந்து உழைப்பில் அதிக பலன் இவை எல்லாம் ஒரு புள்ளியில் சேர எல்லாம் கிடைக்கும்...