மனைவிக்கு கடிதம் – குடும்பத்தின் தோற்றம்
உன்மேல் உள்ள அளவு கடந்த அன்பினால்
வரையும் மடல் இது. கணவன் மனைவியாக 16 ஆண்டு காலம்
கழித்த இனிமை ததும்பும் நம் வாழ்வில் சில கசப்பான மோதல்களும் சச்சரவுகளும் உள்ளதை நம்மால்
மறுக்கவே முடியாது. இந்த முரண்பாடுகள் தான் நம்மையும் நம் குடும்பத்தையும் இயக்கி வருகின்றன.
சுகமும் துக்கமும் கலந்தது தான் வாழ்க்கை, “இதுதான் விதி” என்று எண்ணி கடந்து செல்ல
நாம் சாதாரண கற்பனை உலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள் அல்ல. நித்தம் மாறும் இவ்வுலகில்
நடைமுறையை ஒன்றாக எதிர் நோக்கிய நம் பயணத்தில், வாழ்க்கையை எதார்த்தமாக அணுக நாம் நம்மை
பழகிக் கொள்ள முயற்சித்தோம். ஆ! இது சாதாரண காரியமா? இது ஒரு மாபெரும் மாற்றம் என்று
எனக்கு உணர்த்தியது. உன்னுள் நடக்கும் கருத்துமோதல், உன் எண்ணத்தை அலைபாய செய்வதை நான்
பலமுறை கண்டதுண்டு. வாழ்க்கையை நடைமுறை நிகழ்வாக எண்ணிப் பார்ப்பது என்பதும், பல பழைய
விதிகளை தூக்கி எறிவது என்பதும் நாம் தொடங்கிய தாண்டுதலின் ஆரம்ப கட்டம். காரணம் இல்லாமல்
காரியம் இல்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் காரணம் என்று கூறப்படுவது நடைமுறையில் ஆராய்ந்தால்
அது கற்பிக்கப்பட்ட காரணமாகவே உள்ளது. நம் தலைவிதி, நாம் செய்த பாவம், முற்பிறவி வினை,
தெய்வச்செயல், கோள்களின் இருப்பும் அதன் விளைவும் என்று பலராலும் நமக்கு கூறப்பட்ட
காரணங்கள் காரியங்களை தீர்மானிப்பதாக எண்ணினோம். தெய்வபலம் வேண்டி பல இடர் கடந்தும்
நாம் பல நேரங்களில் இதனைப்பற்றிய உரையாடல்களையும் மேற்கொண்டோம். சில இடங்களில் ஒருமித்த
குரலாய் சில இடங்களில் கருத்து வேறுபாடுகளையும் கொண்டோம். ஆயினும் நாம் கொண்ட கொள்கை
என்பது நமக்கு பல தெளிவுகளை கண்டிப்பாக கொடுக்கும். அதனை உனக்கு விளக்க வேண்டிய இக்கடிதம்.
நாம் காணும் இக்குடும்பவடிவம் என்பது
பல படிநிலைகளைத்தாண்டி இன்று நம்முடன் இருப்பது. விலங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற
அறிவியல் கண்டுபிடிப்பு உன்னுள் ஏட்டளவில் மட்டும் இருந்தால் அதை திருத்திக்கொள், ஏனெனில் அதுதான் நிதர்சனம் மிக மக எதார்த்தமான உண்மை.இது
இயற்கையின் தேர்வு என்பதை அறிய வேண்டும். எண்ணமோ மனமோ கருத்தோ இவ்வுலகையும் மனிதனையும்
படைத்திருந்தால் மனிதன் படிநிலை வளர்ச்சி என்பது கேள்விக்குறியாக போயிருக்கும். மனிதன்
இவ்வுலகில் தோன்றிய படிநிலை வரலாற்றை இன்றளவும் ஒவ்வொரு தாயின் கருவில் தோன்றும் ஒரு
செல் உயிரினத்திலிருந்து அதன் மாற்றம் எவ்வாறு உள்ளது என்பதை, கண்கூடாக இருமுறை பார்த்த
பின்னரும் நாம் மறுக்க முடியாது. இந்த வளர்ச்சிக்கும் அதன் உள்ளே உள்ள முரண்பாடுகளே
காரணம். இதனால் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் முரண்பாடுகள் இன்றியமையாதவை. நான் கற்ற
நூல்களிலும் தத்துவங்களிலும் என்னால் மறக்கவே முடியாத ஒன்று, உன்னிடம் நான் பலமுறை
உரையாடிய இயக்கவியல் விதிகள் தான். இதன் மூலம் நாம் நம்மை சுற்றி உள்ள இப்பொருள் உலகம்,
நம் சமுதாயம் மற்றும் நம் சிந்தனை ஆகியவற்றின் படிநிலை வளர்ச்சியையும் எதார்த்த கண்ணோட்டத்தில்
மிகச்சுலபமாக கண்ணை மூடாமல் மனதை ஒருநிலைப்படுத்தும் சிரமம் இல்லாமல் புலன்களை அடக்காமல்
அறிந்து கொள்ள முடியும். இதற்கு ஆகச் சிறந்த தத்துவ மேதைகளான மார்க்ஸ் மற்றும் எங்கஸின்
பல கட்டுரைகளும் படைப்புகளும் இருந்தாலும் உன்மேல் நான் கொண்ட அன்பினால் உனக்கு கூற
விரும்புகிறேன். இதை நீ அறியும் போது நீ போதிமரம் இல்லாத புத்தனைவிட, யோகங்களை கடந்த
மகாவீரரை விட மிக எளிதில் நிதர்சனம் எது என்பதையும் இயற்கையின் தேர்வு என்பதை அறிவாய்.
விரைவில் தொடரும்.................
Comments
Post a Comment