திவா
இடம்: வால்கா நதிக்கரை மத்திய பாகம்
காலம்: கிமு 3500
இனம்: ஹிந்தோ- ஸ்லாவியர்கள்.
மனிதனின் பரிணாம வளர்ச்சியை டார்வின் விளக்கியது போலவே மார்க்ஸ், எங்கெஸ் சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சிகளை பற்றி "குடும்பத்தின் தோற்றம்" என்ற நூலில் விளக்கியுள்ளார்கள். "திவா" காலத்தில் தாய் வழி சமுதாயமாக இருந்தாலும் அது குடும்பம் என்ற நிலையில் இருந்து குலம் மற்றும் இனக்குழு என்ற நிலைக்கு வந்தது. இதை இயக்கவியலில் விளக்கும்போது பொருளின் அளவு மாறும்பொழுது குணத்திலும் மாற்றம் ஏற்படும் என்ற கூற்றை உறுதி செய்கிறது. இனக்குழுவின் அளவிற்கு ஏற்ப தங்கும் இடம், வேட்டை முறை, குடும்ப உறவுகள், பொருள் உபயோகம் மற்றும் குழுவின் முடிவுகள் ஆகியவற்றை சில பரிணாம மாற்றங்கள் நிகழ்வது நிதர்சனமாகும். உணவு தேவைகள் மற்றும் காலநிலை மனிதனை இடமாற்றத்திற்கு தூண்டுகின்றன. மலைகளின் குகைகளில் இருந்த மனிதன் பருவ நிலைக்கு தகுந்தார் போல காடுகளிலும் நதிக்கரை ஓரங்களிலும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர். பனிக்காலங்களில் மலை குகைகளிலும், கோடையில் நதிக்கரை ஓரங்களிலும், இளவேனில் காலங்களில் காடுகள் மற்றும் சமவெளி பகுதிகளிலும் அவர்கள் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள். வேட்டை விலங்குகள் பருவநிலைக்கு ஏற்ப மாறியது. கோடையில் மீன் பிடித்தல் நன்றாகவும் எளிமையாகவும் அமைந்தது. கால்நடை வளர்ப்பு என்பது அறிமுகமாகாத காலத்தில் வேட்டைக்கு குதிரைகள் வளர்ப்பும், கால்நடை வளர்ப்பும் தாய் வழி சமுதாயத்தின் கடைசி பகுதியில் தோன்றியது. தாய்வழிச் சமுதாயத்தில் மற்ற குலங்களோடு உறவு முறை கொள்ளாமல் குடும்பத்திற்குள்ளான உறவுகளே இருந்தது. ஆனால் தலைமுறை தாண்டிய உறவு தடை விதிக்கப்பட்டது. அதாவது பெற்றோர் குழந்தைகள் இடையே உறவு தடுக்கப்பட்டது. தாய்க்கே அதிகாரம் இருந்தாலும் சமுதாயத்தின் முடிவுகளை பொதுக்கூட்டம் மூலம் எடுக்கப்பட்டது.
வலிமையான அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களைக் கொண்ட குழுவே ஆதிக்கம் செலுத்தியது. வேட்டையாடுவதில் எல்லை பிரச்சினைகளை போர் மூலமாக அவர்கள் தீர்த்துக் கொண்டனர். தோற்ற குழுக்கள் அடிமைகளாக மாற்றப்படவில்லை மாறாக அவர்கள் அனைவரும், பச்சிளம் குழந்தைகள் முதற்கொண்டு கருணை இல்லாமல் கொல்லப்பட்டனர். இங்கு இரக்கம் கருணை போன்றவைகளின் தேவை இன்னும் ஏற்படவில்லை. அங்கு தன் குழு நலமே பிரதானம் அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்தனர் இந்தப் போர் குணம் தான் சிந்து சமவெளியில் வெளிப்பட்டது. குழுவிற்குள் பொதுநலம் பிரதானமாக இருந்தாலும் ஒட்டுமொத்த குழு என்று வரும்பொழுது அது சுயநலமாகவே செயல்பட்டது இதுவே அக்காலத்தில் மக்களின் உரிமையாகவும் கடமை ஆகவும் இருந்தது.
போரின் முடிவில் தப்பி ஓடிய (தோற்றக் குழுவினர்) இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். அவர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றினர் அது பெரும்பாலும் நதிக்கரைகளாகவும் சமவெளி பள்ளத்தாக்குகளாகவும் அமைந்தது. தங்கள் கடந்த கால வாழ்வையும், அதன் எச்சங்களையும் போர் மற்றும் எதிரி இனக்குழுவை பற்றியவற்றை நாடோடி பாடல்களாக அவர்கள் தன் தலைமுறை இடம் தங்கள் வாழ்வியலை சொல்லி இருக்கக்கூடும்.
உலக வரலாற்றில் நாடோடி இனக்குழுக்களை பற்றிய செய்திகள் அவர்களின் செவிவழி கதைகள் மற்றும் நாடோடி பாடல்கள் மூலமாகவே நாம் அறிய முடியும். அகழ்வாராய்ச்சி அல்லது குகைச் சிற்பங்கள் போன்ற சான்றுகள் இவர்கள் பற்றிய தகவல்களை அதிகமாக தருவதில்லை.
குழுவில் உள்ள மக்கள் ஒன்று கூடி மாலை மற்றும் இரவு நேரங்களில் நடனமாடியும் பாடல்கள் பாடியும், குடித்தும், காதல் செய்தும், தங்கள் இரவை கழித்தினர். இதில் இவர்கள் மத்தியில் நெருப்பு உண்டாக்கி அதை சுற்றி நடனமாடும் முறை உள்ளது. நெருப்பின் மூலம் கடவுளைத் தொழுதல் அல்லது குழு நடனம் என்பது குளிர் பிரதேசங்களில் ஒரு வாழ்வியல் கூறாகவே கருத வேண்டி இருக்கிறது.
வெப்ப மண்டலங்களில் இந்த முறை இருப்பது சாத்தியமில்லாதது. அப்படியும் நாம் இந்த முறைகளை வெப்பமடைந்த பகுதிகளில் பார்த்தோமேயானால், அது புலம்பெயர்ந்த இனக்குழுக்களின் எச்சங்கள் என்று தான் கொள்ள வேண்டும். உதாரணமாக மலைவாசிகள் இரவு வேலைகளில் பொது வெளியில் நெருப்புமூட்டி அதில் மாமிச உணவுகளை சுட்டு சாப்பிடும் முறை உள்ளது. காலப்போக்கில் அவர்கள் புலம் பெயர்ந்து புறநகரங்களுக்கு வந்தாலும் தன் வாழ்வியல் லட்சங்களை தொடருவது பார்க்க எப்படி இருக்குமோ, அதேபோல்தான் நெருப்பு உண்டாக்கி செய்யப்படும் வேள்விகளையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது. வேள்விகளில் சொல்லப்படும் ரிசாக்கள் என்பது கவிதைகள் அல்லது நாடோடி பாடல்களாக தலைமுறைகளாய் இருந்த ஒன்று. அதனால் தான் அது ஏற்ற இறக்கங்களுடன் ராகமாக வருகிறது.
Comments
Post a Comment