Skip to main content

முதற்படி

இது மிக யதேர்ச்சியான நிகழ்வு தான். மிக நீண்ட நாட்களாக யாரும் கண்டு கொள்ளாத நிலையில் இருந்த ஒரு புத்தகத்தை பொழுதுபோக்கிற்காக எடுத்து அமர்ந்தேன். அது முதலில் ஒரு சிறுகதைகளின் தொகுப்பு என்றே எண்ணினேன். ஒவ்வொரு கதையின் தலைப்பின் கீழ் அதன் இடம், காலம் மற்றும் இனத்தின் குறிப்பு இருந்தது. முதல் கதை முதல் தடவை படித்தபோது தெளிவாக புரியவில்லை, மேலும் அது அருவருப்பை கொடுத்தது, இரண்டாவது கதையை தொடர்ந்தேன், இரு கதைகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளியும் கதையின் போக்கும் மாறுவதை உணர்ந்தேன். நான் குறிப்பிடும் புத்தகம் என்ன என்பதை ஓரளவு ஊகிக்க முடியும் என்று நம்புகிறேன். ஆம்! அது " வால்கா முதல் கங்கை வரை " மதிப்பிற்குரிய ராகுல் சங்கிருத்தியாயன் அவர்களால் எழுதப்பட்டது. தமிழில் கண. முத்தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. தொடர்ந்து கதைகளை படிப்பதற்கு முன் புத்தகத்தின் முன்னுரையை படித்தேன். இந்தப் புத்தகம் எதனால் சிறப்பு பெற்றது என்பதையும் ஒவ்வொரு கதை நிகழ்வுகளும் எந்த கருத்தைச் சொல்கிறதோ அதன் மூலநோலின் விவரத்தையும் பதஞ்சல் கவுசல்யாயன் என்ற புத்த மத துறவியும் மாபெரும் அறிஞரும் மிகத் தெளிவான சுருக்கமான முன்னுரையில் விளக்கி இருந்தார், அது மிகவும் என்னை ஈர்த்தது. அதன்பின் என் புரிதல் வேறு பரிணாமத்தில் மாறியது, கொடுக்கப்பட்ட மூல நூல்களையும் படிக்கும் ஆர்வம் எழுந்தது. ராகுல்ஜி எழுதிய பிற நூல்களையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தினால் இந்துத்தத்துவ இயல், ஐரோப்பிய தத்துவ இயல், விஞ்ஞான லோகாயதவாதம், புத்த மற்றும் இஸ்லாமிய தத்துவ இயல், மனித சமுதாயம், ரிக்வேத ஆரியர்கள், சிந்து முதல் கங்கை வரை மற்றும் ஊர் சுற்றிப் புராணம் போன்ற நூல்களை தேடி படித்தும் வருகிறேன். முன்னுரையில் சொன்ன குடும்பத்தின் தோற்றம் என்ற எங்கெல்ஸ் நூலின் ஆழ்ந்த வாசிப்பும், அதன் மூலம் கொண்ட புரிதலையும் கொண்டு வாழ்க்கை முதல் கங்கை வரை என்ற என் நூலின் ஒவ்வொரு கதையின் கருவை ஒரு விளக்க உரையாகவும் என் பார்வையில் நான் கொண்ட கருத்துக்களை பதிவு செய்யும் நோக்கிலும் இந்த முதற்படியே அடைகிறேன். எந்த நூலில் வாசிப்பும் அதைத் தொடர்ந்து அதன் மூலநூலின் தேடலும் அதற்குமேல் மீள்வாசிப்பும், ஒரு கருத்தை திறம்பட ஆழ்ந்த புரிதல் தரும் என்று நம்புகிறேன். இதை எளிமையான முறையில் பகிரவும் விரும்புகிறேன்.


Comments